tamilnadu

திருப்பதிக்கு கொண்டுவரப்பட்ட தங்கக்கட்டிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஆந்திர மாநில அரசு உத்தரவு

திருப்பதி, ஏப்.23-  திருப்பதிக்கு தங்கக்கட்டிகள் கொண்டு வரப்பட்டதில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9,259 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக தலைமை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான 1381 கிலோ தங்கத்தை சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.உரிய ஆவணங்கள் வழங்கிய பின்னர் 1381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.சென்னையில் இருந்து திருப்பதிக்கு தங்கக்கட்டிகள் கொண்டு செல்லப்பட்டதில், தேவஸ்தானம் சரியான பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், ஆவணங்கள் இல்லாமல் தேவஸ்தானத்தின் தங்கக்கட்டிகளை கொண்டு சென்றதில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன என்று பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டது. இந்தநிலையில் 1381 கிலோ தங்கக்கட்டி களை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட வி‌ஷயத்தில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் சுப்ரமணியன் உத்தரவிட்டார். இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்த மான தங்கத்தில் 1,938 கிலோ தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், 5,387 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,381 கிலோ தங்கம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் 553 கிலோ தங்கம் உள்ளது.


மொத்தம் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9,259 கிலோ தங்கம் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளது.இதில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 1,311 கிலோ தங்கம் 3 ஆண்டு காலத்தில் 1.75 சதவீதம் வட்டியுடன் மீண்டும் தங்கமாக பெறும் விதமாக முதலீடு செய்யப்பட்டது. மூன்றாண்டு காலக்கெடு கடந்த 18 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.வட்டியாக கிடைத்த 70 கிலோ தங்கத்துடன் சேர்த்து மொத்தம் 1,381 கிலோ தங்கத்தை பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அதிகாரிகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கு கொண்டு வரும்போது தேர்தல் அதிகாரிகள் அதனை பிடித்தனர்.ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் வழங்கினர். உடனடியாக சென்னை சென்று தமிழக காவல்துறையினரிடமும், தேர்தல் அதிகாரிகளிடமும் தங்கத்தின் விவரங்கள் குறித்த ஆவணங்களை வழங்கினோம். இதையடுத்து உரிய ஆவணங்களை வழங்கி திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்திற்கு பத்திரமாக 1,381 கிலோ தங்கத்தை கொண்டு வந்துள்ளோம். வங்கிகளில் தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ள தங்கத்தை, டெபாசிட் காலம் முடிந்த பின்னர்திருப்பதிக்கு கொண்டு வந்து தேவஸ்தானத் தின் கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டியது வங்கிகளின் கடமை ஆகும்.எனவே, சென்னையில் இருந்து ஆயிரத்து 381 கிலோ தங்கக்கட்டிகளை கொண்டுவந்த வி‌ஷயத்தில் தேவஸ்தானம் சரியான நடைமுறைகளை பின்பற்றியதா என்ற கேள்விக்கே இடமில்லை. ஆந்திர மாநில தலைமை செயலரின் விசாரணை ஆணையை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

;